தருமபுரியிலிருந்து பெற்றோருக்குத் தெரியாமல் நாகைக்குத் தனித்து வந்த 2 சிறுவர்கள், நாகை போலீஸாரால் சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.
தருமபுரி பகுதியைச் சேர்ந்த நிஷாத் மகன் ஜிலான்பாட்சா(14), சாதிக்பாட்சா மகன் முகமது இப்ராஹிம்(8). அங்குள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் பயிலும் இவர்கள், பள்ளி விடுப்பு நாள்களில் அருகில் உள்ள ஒரு மதரஸாவில் தங்கியிருந்து உருது மொழி கற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மதரஸாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் சென்னைக்குச் செல்லத் திட்டமிட்ட ஜிலான்பாட்சா, முகமுது இப்ராஹிம் ஆகிய இருவரும், ரயில் மூலம் வெள்ளிக்கிழமை நாகூர் வந்தடைந்தனர். நாகூர் பகுதியில் சுற்றித் திரிந்து விட்டு, நாகையிலிருந்து சென்னைக்கு செல்லத் திட்டமிட்டு அவர்கள் சனிக்கிழமை காலை நாகை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில், ஒரு அரசுப் பேருந்து ஓட்டுநரைச் சந்தித்த சிறுவர்கள், தங்களிடம் ரூ. 90 இருப்பதாகவும், தாங்கள் சென்னைக்குச் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அவர், பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தார்.
இதையடுத்து, அந்த 2 சிறுவர்களையும் தங்கள் பாதுகாப்பில் ஏற்ற வெளிப்பாளையம் போலீஸார், சிறுவர்களின் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர்.