தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் விழா மற்றும் எதிர்வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா போன்ற நிகழ்வுகள் தமிழக அரசின் அனுமதி பெற்று அரசிதழில் வெளியிடப்பட்ட பின்பு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசிதழ் ஆணையில் தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும்விழா போன்றவை எந்தவொரு இடத்திலும் நடத்திட அனுமதி பெறப்படவில்லை. எனவே, தருமபுரி மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா ஆகியவை நடத்தக் கூடாது.
மேலும், கோயில் திருவிழா, பாரம்பரிய நிகழ்வு என்பதை குறிப்பிட்டும் இத்தகைய நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை. அறிவுறுத்தலை மீறி போட்டி நடத்தப்பட்டால் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, சேவல் சண்டை, ரேக்லா ரேஸ் போன்ற விளையாட்டுகளுக்கும் அனுமதியில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.