தருமபுரி, ஏலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.8.52 கோடி மதிப்பில் 50 வகுப்பறைகளுக்கான கட்டடம் கட்டும் பணியை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வனத் துறையினருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து வனத் துறையினருக்குச் சொந்தமான இடத்துக்குப் பதிலாக மாற்று இடத்தில் சட்டப்படி இடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்காக ரூ.5.61 கோடி மதிப்பில் 34 புதிய வகுப்புறைகள், அறிவியல் ஆய்வகம், சுற்றுச் சுவர், தண்ணீர் வசதி, கழிவறை கட்டடங்கள் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடக்கிவைத்தார்.
மேலும், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.90 கோடி மதிப்பிலான 16 புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், தண்ணீர் வசதி, கழிப்பறை கட்டடம் என மொத்தம் ரூ.8,52 கோடி மதிப்பிலான பணியையும் அவர் தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் தருமபுரி சார்- ஆட்சியர் ம.ப.சிவன் அருள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமசாமி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்டக் கல்வி அலுவலர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கட்டப் பணிகள் 10 மாதங்களில் நிறைவு பெறும்.