தருமபுரியில் 2-ஆவது புத்தகத் திருவிழாவை வருகிற ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆக.4-ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தகடூர் புத்தகப் பேரவையின் நிகழாண்டு புத்தகத் திருவிழாவுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை தருமபுரி முத்து இல்லத்தில் முன்னாள் எம்.பி. இரா.செந்தில் தலைமையில் நடைபெற்றது. பேரவையின் தலைவர் இரா.சிசுபாலன், ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் சி.ராஜசேகரன், ஓய்வுபெற்ற மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஆர்.கே.கண்ணன், விஞ்ஞானி குந்தவை, தொல்லியல் ஆர்வலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.
இக் கூட்டத்தில், தகடூர் புத்தகப் பேரவையின் இரண்டாவது புத்தகத் திருவிழாவை தருமபுரி பாரதிபுரம் மதுராபாய் திருமண மண்டபத்தில் வருகிற ஜூலை மாதம் 26-ஆம் தேதி தொடங்கி ஆக.4-ஆம் தேதிவரை நடத்துவது. இந்த புத்தகத் திருவிழாவுக்கான, வரவேற்புக் குழு அமைக்கும் கூட்டத்தை பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்துவது மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நூல்கள் வாங்குவதற்கு ஏதுவாக உண்டியல்களை அளிப்பது, மலர்கள் வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், விழாவையொட்டி, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி ஆகியோரைச் சந்தித்து ஒத்துழைப்பு கோருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.