தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
குமாரசாமிபேட்டையிலுள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருத்தேர் பெருவிழா 11 நாள்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாக் கொடியினை ஜன. 17-ஆம் தேதி காலை 9 மணிக்கு மந்திரங்கள் ஓதியபடி ஏற்றினர். இதையடுத்து, ஆட்டுக்கிடா வாகனத்தில் சிவசுப்பிரமணியரின் திருவீதி உலா நடைபெற்றது.
முன்னதாக, ஜன. 16-ஆம் தேதி புறவழிச் சாலையில் உள்ள கோயில் நிலத்தில் புற்றுமண் எடுத்து முளையிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக, ஜன. 18-ஆம் தேதி இரவு 9 மணிக்கு புலி வாகன உத்ஸவம், ஜன. 19-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பூத வாகன உத்ஸவம், ஜன. 20-ஆம் தேதி இரவு நாக வாகன உத்ஸவம் நடைபெற உள்ளது. அதேபோல, ஜன. 21-ஆம் தேதி பக்தர்கள் பால் காவடி, பூக்காவடிகள் எடுக்கும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உத்ஸவம் மற்றும் பொன்மயில் வாகனத்தில் வீதி உலா, ஜன. 22-ஆம் தேதி விநாயகர் ரதம் மற்றும் யானை வாகன உத்ஸவம் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான மகளிர் மட்டுமே பங்கேற்று திருத்தேரை நிலைபெயர்க்கும் மகா ரதம் இழுத்தல், ஜன. 23-ஆம் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து, வேடர் பறி வாகனம், பூப்பல்லக்கு உத்ஸவம் மற்றும் சயன உத்ஸவத்தோடு ஜன. 26 விழா நிறைவடைய உள்ளது.
இத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.