அரூரில் கடும் பனிப் பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் வெள்ளிக்கிழமை அவதியுற்றனர்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சித்தேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை விடியற்காலை 5 மணியளவில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது. இதனால், சுமார் 2 மீட்டர் தொலைவுக்கு கூட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் இருந்து வெளிச்சம் கிடைக்காத நிலை இருந்தது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்களை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. பனிப் பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை அடைந்தனர். இந்தப் பனிப் பொழிவானது காலை 7 மணி வரையிலும் நீடித்தது.