பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கும்பாரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் அரவிந்தகுமாரிடம் (21), இதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சேட்டு (40) உள்ளிட்ட சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனராம்.
புகாரின் பேரில், கும்பாரஹள்ளியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன்கள் சேட்டு (40), பூபதி (32), சேட்டு மகன் சந்துரு (22), சேகர் மகன் மாயக்கண்ணன் (36) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் அரவிந்தகுமார் (21), விக்னேஸ்வரன் (22), ராகுல் (21), அருண்குமார் (25) உள்ளிட்டோர் காயமடைந்தனர். இது குறித்து பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கம்பைநல்லூரில் 3 பேர் கைது: கம்பைநல்லூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மாது மகன் சிவபெருமாள் (33), ஆல்ரப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சந்தோஷ்குமார் (25) ஆகியோரிடையே வியாழக்கிழமை பொங்கல் விழாவில் தகராறு ஏற்பட்டதாம். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனராம். புகாரின் பேரில், ஆல்ரப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சந்தோஷ்குமார் (25), முருகன் மகன் காமராஜ் (23), குமார் மகன் சிவா (24) ஆகியோரை கம்பைநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.