கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அச் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி தனியார் மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சைக்குச் சேர்ந்த சோகத்தூரைச் சேர்ந்த அபிராமி (27) என்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தார். சிகிச்சைப் பெற்ற பின் வலிப்பு வந்துவிட்டதாகவும், தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்கள் சோதனை செய்தபோது இறந்தார் என தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. இந்தச் சம்பவம் மிகவும் வேதனையை அளிக்கிறது. கர்ப்பிணிப் பெண்ணையும், குழந்தையையும் பாதுக்காக்க மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. மேலும், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகன வசதி இருந்தும் தனியார் மருத்துவமனைகளை அணுகுவது ஏன்? என்ற கேள்வி தருமபுரி மாவட்டத்தில் இருந்து வருகிறது. எனவே, தருமபுரியில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், நீதி விசாரண நடத்தி உண்மையைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுநர், உதவியாளர் ஆகியோரை அமர்த்தி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.