தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் ஜெ. பிரதாபன் தலைமை வகித்துக் கோரிக்கைளை விளக்கிப் பேசினார். இதில், தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணப் பணிகளைத் தொடங்க வேண்டும். காய்ந்த பயிர்கள், மரங்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
வறட்சியால் காய்ந்த நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
காய்ந்துபோன தென்னை மரத்துக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பதிவு செய்து அனைவருக்கு பணி வழங்கிட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளைத் தூர் வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் முருகேசன், மாதையன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். முன்னதாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெறும் என ஏற்கெனவே விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால், அச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.