தருமபுரி அம்பேத்கர் காலனியில் உள்ள அருள்மிகு ஊர் மாரியம்மன் திருக்கோயிலில் ஜூலை 11-இல் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது.
தருமபுரி அம்பேத்கர் காலனியில் உள்ள அருள்மிகு ஊர் மாரியம்மன் திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவையொட்டி, ஜூலை 10-ஆம் தேதி (புதன்கிழமை) காலை புனித தீர்த்தக்குடம் சாலை விநாயகர் கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளது. இரவு 7.45 மணிக்கு முதல்கால வேள்வி மற்றும் பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெறும். இதன் பின்பு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து, ஜூலை 11-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காப்பு அணிவித்தல், காலை 7.30-க்கும் இரண்டாம் கால வேள்வி, காலை 9.30 மணிக்கு கோபுரக் கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு மற்றும் 9.45-க்கு மூல மூர்த்திகளுக்கு நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அருளுரை, பெருதிருமஞ்சனம், நண்பகல் 12.30 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.