மொரப்பூர், சிந்தல்பாடி வட்டாரப் பகுதிகளில் தொழுநோய் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், ராமியனஹள்ளி, மொரப்பூர், கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தொழுநோய் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒடசல்பட்டி, அம்பாலப்பட்டி, சிந்தல்பாடி, பசுவாபுரம், கந்தகவுண்டனூர், அய்யம்பட்டி, வகுத்தப்பட்டி, நொச்சிக்குட்டை, தொங்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் சுகாதார மேற்பார்வையாளர்கள் க.கரிகாலன், விஜய் ஆனந்த், செவிலியர்கள் மல்லிகா, சுகந்தி உள்ளிட்டோர் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மொரப்பூர் வட்டாரப் பகுதியில் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் 3700 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இதில், 8 பேர் தொழுநோய் பாதிப்பு குறித்த மருத்துவப் பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பில் ஒருவருக்கு தொழுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.