நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் ஒருவர் போலீஸில் சரணடைந்தார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே முக்குளம் ஏரியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார் ஏரியில் பார்த்தபோது அங்கு ஆண் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த போலீஸாரின் விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த பைனான்சியர் லட்சுமணன் என்பது தெரியவந்தது. இதற்கிடையில் பைனான்சியரை கொன்று புதைத்ததாக முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (30) என்பவர் புதன்கிழமை போலீஸில் சரணடைந்தார். இதையடுத்து அவரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.