மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்: ஜூலை 16-இல் தொடக்கம்: தருமபுரி ஆட்சியர்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வருகிற ஜூலை 16-ஆம் தேதி தொடங்கி ஜூலை 25-ஆம் தேதி வரை வட்டார அளவில் நடைபெற உள்ளது என ஆட்சியர் சு. மலர்விழி கூறினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 18 வயதுக்குள்பட்ட  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடத்துவது குறித்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், ஆட்சியர் சு.மலர்விழி பேசியது:
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் சார்பில், வருகிற ஜூலை 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 18 வயது வரையுள்ள அனைத்து வகையான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் வட்டார அளவில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
முகாமில், கை மற்றும் கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்குவாதம், கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
முகாமில், மாற்றுத் திறன் தன்மையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாகவும், தேவையான உதவி உபகரணங்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் வாயிலாகவும் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளன.
மேலும் அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
ஜூலை 16-இல் தருமபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும், ஜூலை 17-இல் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஜூலை 18-ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜூலை 19-ஆம் தேதி பாலக்கோடு (உருது) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜூலை 22 -ஆம் தேதி நல்லம்பள்ளி ஒன்றியம் அவ்வைநகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஜூலை 23-ஆம் தேதி அரூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஜூலை 24-இல் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் ஜூலை 25 அன்று பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணி (தருமபுரி), ஆனந்தன் (அரூர்), சண்முகவேல் (பாலக்கோடு), ஒருங்கிணைந்த பள்ளிகல்வி உதவித்திட்ட அலுவலர்கள் வெங்கடேசன், தங்கவேலு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com