தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம், வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பௌத்தம், பாரசீக மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் இனத்தவருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் திட்டம் மற்றும் சுயஉதவிக் குழுக்களான சிறு தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இதில், தருமபுரியில் ஜூலை 20-இல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், ஜூலை 23-ஆம் தேதி நல்லம்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை அலுவலகம், ஜூலை 30-ஆம் தேதி பென்னாகரம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை அலுவலகம், ஆக. 6-ஆம் தேதி பாலக்கோடு மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை, ஆக. 13-ஆம் தேதி காரிமங்கலம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை, ஆக. 20-ஆம் தேதி அரூர் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை, ஆக. 27-ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை உள்ளிட்ட இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
இத் திட்டத்தில், சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் நபர் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மற்றும் தனிநபர் கடன் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவி பெற குடும்ப ஆண்டு வருவாய் நகர் புறத்தில் ரூ.1,03,000 மிகாமலும் கிராமப் புறத்தில் ரூ.81 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.
எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் ஜாதிச் சான்று நகல், வருவாய் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், திட்ட அறிக்கை, வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் முகாம்களில் கலந்துகொண்டு அனைத்து சிறுபான்மையினர்களும் கடனுதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.