தகுதிகேற்ப ஊதிய உயர்வு வழங்கக் கோரி, அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலர் கெளரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தகுதிக்கேற்ப ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள் என்பதை கைவிட்டு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்களை நியமனம் செய்யும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது மற்றும் வரும் 18-ஆம் தேதி புறநோயாளிகள் சிகிச்சை அளிக்கும் பணியை ஒரு மணி நேரம் புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், கோபி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
இதில், உயர் கல்வி முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.