தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் சனிக்கிழமை விவேகானந்தர் ரத ஊர்வலம் நடைபெற்றது.
சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரமம் சார்பில், விவேகானந்தர் ரதம் அண்மையில் தருமபுரி மாவட்டத்துக்கு வந்தது. இந்த ரதத்துக்கு தொப்பூர், நல்லம்பள்ளி, தருமபுரி, அதகப்பாடி, இண்டூர் ஆகிய ஊர்களில் வரவேற்பு அளித்து வழிபாடு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜூலை 26, 27 ஆகிய இரண்டு நாள்கள் மாரண்டஅள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரதம் வந்தது. இதில் சனிக்கிழமை பாலக்கோட்டிற்கு வந்த ரதத்துக்கு சுவாமி தயானந்த மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து பாலக்கோடு தக்காளி சந்தை வளாகத்திலிருந்து விவேகானந்தர் ரத ஊர்வலமாக பாலக்கோடு பேருந்து நிலையம் சாலை வழியாக காவல் நிலையம் வரை சென்றது.
ஊர்வலத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் மாலைகள் அணிவித்து ரதத்தை வரவேற்றனர். இதில் மாணவியரின் கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஊர்வலத்தின் நிறைவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.