இன்ஜின் பழுது காரணமாக தூத்துக்குடி -மைசூரு விரைவு ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
தூத்துக்குடி - மைசூரு இடையே மதுரை - சேலம் - தருமபுரி வழியாக இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 16235) செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் தருமபுரி மாவட்டம், தொப்பூர் பகுதியில் சென்றபோது பழுதாகி நின்றது. இதையடுத்து, பழுது சரி செய்யப்பட்டு அதிகாலை 4 மணியளவில் ரயில் புறப்பட்டுச் சென்றது. ஆனால், சிறிது தொலைவு சென்றபின்பு முத்தம்பட்டியில் மீண்டும் இன்ஜினில் பழுது ஏற்பட்டதால், ரயில் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி ரயில் நிலையத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு, இணைக்கப்பட்டு பின்னர் அதிகாலை 5.35 மணியளவில் ரயில் புறப்பட்டுச் சென்றது. இன்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக தூத்துக்குடி - மைசூரு விரைவில் ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாகச் சென்றது. ரயில் பழுதாகி நின்றதால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அவதியுற்றனர்.