அரசு மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் 72 அங்கன்வாடி மையங்களில் செயல்படும் மழலையர் வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளஆசிரியர்கள் மாண்டிசோரி முறையில் கற்பித்தலை நடத்துவது, மொழி வளர்ச்சிக்குத் தேவையான பாடல்கள், கதைகள் போன்ற செயல்பாடுகளுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய மொழி உச்சரிப்பு குறித்த சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதேபோல, குழந்தைகளுக்கு உளவியல், முன்பருவப் பாடத் திட்டங்கள், அதை அணுகும் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் அண்மையில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி தொடக்கி வைத்தார். உதவித் திட்ட அலுவலர் பா.வெங்கடேசன், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.தங்கவேலு ஆகியோர் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ப.குமுதா, சு.சுகந்தி, முதன்மைக் கருத்தாளர்கள் தனலட்சுமி, வினோதினி, பார்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.