திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி அசோக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்டச் செயலர் பி.வி.மாது தலைமை வகித்தார்.
இந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த அசோக் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலர் டி.மாதையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.