கடத்தூர் நகர் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. கடத்தூர் - சிந்தல்பாடி செல்லும் சாலையோரத்தில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், பலத்த காற்று வீசும் போது குப்பைகள் விவசாய நிலத்திலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிதறிக்கிடக்கிறது. அதேபோல், அதிக நாள்கள் ஒரே இடத்தில் குப்பைகள் தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
கூறுகின்றனர்.
எனவே, கடத்தூரில் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.