தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான சப்- ஜூனியர் குத்துச் சண்டை போட்டியில் 180 பேர் பங்கேற்றனர்.
தருமபுரி மாவட்ட குத்துச் சண்டை சங்கம் சார்பில், ஜூன் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாள்கள் மாநில அளவிலான சப்- ஜூனியர் குத்துச் சண்டை போட்டி தருமபுரியில் நடைபெற்றது. இப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 180 பேர் பங்கேற்றனர்.
இதில், 36 - 38 கிலோ எடைப் பிரிவில், தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகேயுள்ள மல்லசமுத்திரம் மாணவி செளமியா ஸ்ரீ தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல, 64 - 67 கிலோ எடைப் பிரிவில் விளையாடிய தருமபுரியைச் சேர்ந்த எம்.சஞ்சய் என்பவர் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், இந்த விளையாட்டில் சிறப்பிடம் வகித்து வெற்றி பெற்றவர்கள் வருகிற ஜூலை மாதம் ஹரியாணாவில் நடைபெற உள்ள தேசிய சப் ஜூனியர் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதேபோல, சிறப்பிடம் வகித்து வெற்றி பெற்ற பெண்கள், வருகிற செப்டம்பர் மாதம் மகாராஷ்டிராவில் நடைபெறும் தேசிய சப் ஜூனியர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.