விளையாட்டுத் துறையில் பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டிற்கு நற்பெயரையும் புகழையும் அகில உலக அளவில் ஈட்டித்தந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவ் விருதுகள் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், பொது விவகாரம், வர்த்தகம் மற்றும் தொழில் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகின்றன.
தற்போது 2019 - ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. பத்ம விருது பெற, குறிப்பிட்ட துறைகளில் முன்னதாக தேசிய விருதோ அல்லது மாநில விருதோ பெற்றிருத்தல் வேண்டும்.
சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளில் உள்ள திறமையானவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள் ஆவர். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர, இதர அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.
இவ் விருதுகள் தொடர்பான விவரங்கள், www.padmaawards.gov.in என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வருகிற ஜூன் 20 - க்குள் தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, தகுதியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டுமே இவ் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.