தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரைப் போட்டிகள் தகடூர் புத்தகப் பேரவை சார்பில் நடைபெற உள்ளன.
இது குறித்து, தகடூர் புத்தகப் பேரவை வெளியிட்ட அறிக்கை: தருமபுரியில் வருகிற ஜூலை 26 - ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை, தகடூர் புத்தகப் பேரவை சார்பில், 2 - ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இத் திருவிழாவையொட்டி, மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கும், பங்கேற்போருக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இதில், கல்லூரி மாணவர்களுக்கு, பேச்சுப் போட்டி, "நான் ஆணையிட்டால்' என்கிற தலைப்பில் (இடம் மற்றும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்), கட்டுரைப் போட்டி "என்னை கவர்ந்த புத்தகம்' மற்றும் கவிதை போட்டி, "கனவு மெய்ப்பட வேண்டும்' ஆகிய தலைப்புகளில் நடத்தப்படும். அதேபோல, 10 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, "மகாத்மா காந்தி 150' என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், கவிதைப் போட்டி, "வானமே எல்லை' எனும் தலைப்பிலும், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கட்டுரைப் போட்டி, "நான் கண்ட தருமபுரி புத்தகத் திருவிழா' என்கிற தலைப்பிலும், அதேபோல, 1 முதல் 5 மற்றும் 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி "புவியைக் காப்போம்' என்கிற தலைப்பிலும் நடைபெறும்.
இதில், கவிதை 15 வரிகளுக்குள்ளும், கட்டுரைகள் மூன்று பக்கங்களுக்குள்ளும் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அனுப்ப வேண்டும். மாணவ, மாணவியர் தங்களது படைப்புகளை வருகிற ஜூலை 10-ஆம் தேதிக்குள் தருமபுரி, அரூர், பாலக்கோடு ஆகிய மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கும், கல்லூரி மாணவ, மாணவியர், தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் உள்ள முன்னாள் மாணவர் சங்க அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.