விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்  எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எம்.தங்கராஜ் தலைமை வகித்தார். 
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஏரிகள், குளம் குட்டைகள் தூர்வாருதல், கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். இந்த திட்டத்தை அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுப்படுத்த வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.  அரூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தட்டுப்பாடின்றி நீர் வழங்க வேண்டும். 
தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும். கீழானூரில்  அரசுக்கு சொந்தமான திறந்தவெளிக் கிணற்றில் மின் மோட்டார் அமைத்து குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். 
வேடகட்டமடுவு ஊராட்சியில் மேல்செங்கப்பாடி, மொண்டுகுழி, பாரிவனம், முல்லைவனம், டி.ஆண்டியூர், கருங்கல்பாடி ஆகிய கிராமங்களுக்கு மயான வசதி ஏற்படுத்த
வேண்டும்.
வேடகட்டமடுவு ஊராட்சியில் அரசு நிலத்திலுள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில்,  சங்க மாவட்டச் செயலர் எம்.முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர்
கலந்துகொண்டனர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையில்  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள்  சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கே. எம். சத்யராஜ் தலைமை வகித்தார்.  வி.சுப்பிரமணி,  வி.மொளுகு, எம்.சுப்பிரமணி, எஸ்.ரத்தினம்மாள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி,  மாவட்ட பொருளாளர் கே.செல்வராசு, மாவட்டக் குழு உறுப்பினர் வி. வேலு  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  இதில் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக உயர்த்திட வேண்டும்.  சிங்காரப்பேட்டை சந்தைப்பகுதி,  அனுமன்தீர்த்தம் மேம்பாலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில்  குப்பைகளையும், கழிவுகளையும் அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.  60 வயது முடிந்த அனைவருக்கும் நிபந்தனையின்றி முதியோர் உதவித் தொகை வழங்கிட வேண்டும்.  ஊத்தங்கரை ஒன்றியத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில்  உடனடியாக தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஜயகுப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com