சீரான குடிநீர் விநியோகம் கோரி, பாலக்கோட்டை அடுத்த எருதுகூட அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இக் கிராமத்துக்கு வரும் குடிநீர் குழாயில் முறைகேடாக சிலர் குடிநீர் திருடி வருகின்றனராம். இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், எருதுகூட அள்ளியில் தண்ணீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாலக்கோடு- பெல்ரம்பட்டி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மாரண்டஅள்ளி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.