மக்களவை, இடைத் தேர்தல்களில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி காரிமங்கலத்தில் சனிக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, இப்பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தார். காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தொடங்கி இப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற சுய உதவிக்குழுப் பெண்கள், மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு விநியோகித்தனர். இதைத் தொடர்ந்து, விடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. முன்னதாக, பேரணியில் பங்கேற்றோர் மற்றும் அதிகாரிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்கிற உறுதிமொழியேற்றனர்.
இதையடுத்து, பெரியாம்பட்டியில் பெண்களுக்கு விழிப்புணர்வு கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிறப்பிடம் வகித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், உதவித் திட்ட அலுவலர்(மகளிர்) கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.