தருமபுரியில் நகர்ப்புற வீடற்றோர் உண்டு, உறைவிடம் மற்றும் சாலையோர வியாபாரிகளிடத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி மக்களவைத் தொகுதி, அரூர் (தனி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளன.
இதையொட்டி, தருமபுரி நகரில் நகர்ப்புற வீடற்றோருக்கான உண்டு உறைவிடம் மற்றும் சாலையோர கடைகள் வைத்திருப்பவர்களிடம் தேர்தலில் 100 சதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் கூடிய யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகள் வாக்காளர்களிடம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதியமான்கோட்டை புறவடையில் திருநங்கைகள் குடியிருப்பு ஆகிய இடங்களிலும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி மற்றும் அலுவலர்கள் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்.