தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட நாள்தோறும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அச் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பாலக்கோட்டில், மாவட்ட துணைத் தலைவர் ஜி.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் பேசினார். இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும். கால்நடைகளுக்கு இலவசமாக தண்ணீர் மற்றும் தீவனங்களை வழங்க வேண்டும். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட ஒகேனக்கல் குடிநீரை நாள்தோறும் விநியோகம் செய்ய வேண்டும். வறட்சி காரணமாக காய்ந்துபோன பயிர்கள், மரங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் துணைச் செயலர் என்.பி.ராஜி, பொருளாளர் சரோஜா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாதையன், சாக்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.