ஸ்டாலின் கனவு நனவாகாது: அன்புமணி ராமதாஸ்

திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு நனவாகாது அது கனவாகவே தொடரும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு நனவாகாது அது கனவாகவே தொடரும் என்றார் அன்புமணி ராமதாஸ்.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதையொட்டி, புதன்கிழமை தருமபுரிக்கு வந்த அவர், அதிமுக அலுவலகத்துக்குச் சென்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனை சந்தித்தார்.
இதையடுத்து, அங்கிருந்து எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகளிடம் அன்புமணி ராமதாஸ் பேசியது:
இத் தேர்தலில் நாம் அமைத்திருக்கும் கூட்டணி மெகா கூட்டணி. இக் கூட்டணி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 தொகுதி இடைத் தேர்தல்களில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறபோகிறது.
இக் கூட்டணி சார்பில் தருமபுரியில் மக்களவைத் தொகுதிக்குப் போட்டியிட கட்சி தலைமை எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இது இயற்கையான கூட்டணி. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணவத்தில் பேசி வருகிறார்.
அவர் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என கனவு காண்கிறார். அவரது கனவு நனவாகாமல் கனவாகவே தொடரும். தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது.
தமிழக உரிமைகளை மீட்டெடுக்கவே இக் கூட்டணி உருவாகியுள்ளது. தருமபுரி மக்களவைத் தொகுதி மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடைத் தேர்தல்களில் நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.
தருமபுரி-மொரப்பூர் ரயில்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை முன்னேற்றுவதே நமது நோக்கம் என்றார்.
இக் கூட்டத்தில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியது:
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என அனைத்துக் கட்சிகளும் கொண்ட மெகா கூட்டணி. இக் கூட்டணி சார்பில், தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக-வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, இடையிலே சிலர் இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து அதில் தோல்வியடைந்தனர். அவர்களின் செயல்களால் தருமபுரி மாவட்டத்தில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் மற்றும் மக்களவை பொதுத் தேர்தல் என மூன்று தேர்தலை சந்திக்கிறோம். இந்த மூன்று தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து ஓயாது உழைப்போம் என்றார்.
கூட்டத்தில், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. இரா.செந்தில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர். அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com