திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கனவு வரும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேறப்போகிறது என்றார் தருமபுரி மாவட்ட திமுக செயலர் தடங்கம் பெ. சுப்பிரமணி எம்எல்ஏ.
மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் டிஎன்வி செந்தில்குமாரை அறிமுகம் செய்யும் கூட்டம் புதன்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், வேட்பாளரை அறிமுகம் செய்து, திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ. சுப்பிரமணி எம்எல்ஏ பேசியது:
மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலானது மத்திய, மாநில அரசுகளை மாற்றுகிற தேர்தலாகும். திமுக தலைமையில் மிக பலமான கூட்டணி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தருமபுரி தொகுதியில் திமுக மக்களவை உறுப்பினர் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை, பாமகவினர் தாங்கள் கொண்டு வந்ததாகக் கூறுகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக சிலர் கூறி வருகின்றனர். அவரது கனவு வருகிற ஒரு மாத காலத்திற்குள் நிறைவேறப்போகிறது.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதசார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எனவே, இந்த வெற்றிக்காக கூட்டணி கட்சியினருடன் இணைந்து பாடுபடுவோம் என்றார்.
இக் கூட்டத்தில், பென்னாகரம் எம்எல்ஏ பி.ன்.பி. இன்பசேகரன், அரூர் தொகுதி திமுக பொறுப்பாளர் இரா.தாமரைச்செல்வன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக பொறுப்பாளர் பார் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.