பங்குனி உத்திரத்தையொட்டி, கம்பைநல்லூர் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கம்பைநல்லூரில் பழமை வாய்ந்த அருள்மிகு சிவசுப்பிரமணியர் திருக்கோயிலில் பங்குனி உத்திர தேரோட்ட விழா கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மார்ச் 17-ஆம் தேதி திருவிழா கொடியேற்றப்பட்டது. மார்ச் 18 முதல் 21-ஆம் தேதி வரை, பல்வேறு வாகன உத்ஸவம் மற்றும் திருக்கல்யாண சேவை நடைபெற்றது.
மேலும், மார்ச் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு விநாயகர் ரத உத்ஸவம் நடைபெற்றது. இதில், விழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு சிவசுப்பிரமணி சுவாமி திருத்தேரோட்ட விழா சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதில், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் திருக்கோயிலை திருத்தேர் வந்தடைந்தது.
இதேபோல, இரவு 7 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி வாகன வீதி உலா நடைபெற்றது.
விழாக் குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் மார்ச் 24-ஆம் தேதி வேடர்பறி உத்ஸவம், மார்ச் 25-ஆம் தேதி விழா கொடியிறக்குதல் மற்றும் மார்ச் 27-ஆம் தேதி வசந்த உத்ஸவ சேவையுடன் நிறைவடைகிறது.