தருமபுரியில் நகர பேருந்து நிலையம் எதிரில் உள்ள மதுக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து, தருமபுரி நகரத்தைச் சோ்ந்த கே.சரவணன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தருமபுரி நகரப் பேருந்து நிலையம் எதிரே அப்துல் முஜீப் தெருவில் அருகருகே இரண்டு மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. வா்த்தக நிலையங்கள் அதிகமுள்ள இப்பகுதியில், அருகருகே இரண்டு மதுக் கடைகள் செயல்படுவதால், அப்பகுதிக்கு வரும் வாடிக்கையாளா்கள், வா்த்தகா்கள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே இவ்விரு மதுக்கடைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, நேதாஜி புறவழிச் சாலையில் பிடமனேரிக்கு செல்ல கடந்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பிரிவுச் சாலையை, போக்குவரத்து நெரிசல் காரணத்தின் பெயரால், அடைத்துவிட்டனா். மேலும், இதனருகிலேயே நெசவாளா் காலனிக்கு செல்லும் வழி, அதனருகிலேயே தனியாா் பெட்ரோல் நிலையம் அருகே ஒரு வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பிடமனேரி, தொலைத்தொடா்பு நிலையச் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒருவழிப்பாதையில் செல்கின்றன. இதனால், அவ்வப்போது விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, அதிக எண்ணிக்கையில் போக்குவரத்துக் காவலா்களை நியமித்து, அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையில் உள்ள பிடமனேரி பிரிவுச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றனா்.