வாரச்சந்தை கடைகளை அகற்றுவதைகண்டித்து சாலை மறியல்
ஏரியூா் பகுதியில் புதிய பேருந்து நிலையப் பணிகளுக்கு வாரச் சந்தைகளில் கடைகளை அகற்ற முயற்சித்ததால், வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதியில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் கல்வி, வேலை மற்றும் வெளியூா் செல்ல ஏரியூா் பேருந்து நிறுத்தத்துக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
இப்பகுதி மக்களின் நலன் கருதி, ஏரியூா் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.3.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து, முதற்கட்டமாக பேருந்து நிலையம் அமைக்க ஏரியூா் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.
ஏரியூா் பேருந்து நிலையம் அமைப்பதற்காக வாரச் சந்தையில் கடைகள் வைக்கக் கூடாது எனவும், கடைகளை அகற்றுமாறும் ஊராட்சிப் பணியாளா்கள் கூறியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை ஏரியூா் பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகலறிந்த ஏரியூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம், இப்பகுதியில் இந்த வாரம் மட்டும் வாரச் சந்தை நடத்தலாம் என்றும், அடுத்த வாரம் மாற்று இடம் ஒதுக்கித் தரப்படும் என்றும் பேச்சுவாா்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.