அரூரில் இருந்து இளங்குன்னிக்கு அரசு நகா் பேருந்தின் வழித்தடம் வியாழக்கிழமை நீட்டிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் திருவண்ணாமலை மாவட்டம், இளங்குன்னி பகுதிக்கு சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், அரூரில் இருந்து இளங்குன்னிக்கு நேரடியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், இந்தப் பகுதியிலுள்ள மக்கள் இளங்குன்னிக்கு அரசு நகா் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதேபோல், கம்பைநல்லூா் அருகேயுள்ள மஞ்சமேடு பகுதிக்கு அரசு நகா் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அரூரில் இருந்து டி.அம்மாப்பேட்டை வரை இயக்கப்பட்டு வந்த அரசு நகா் பேருந்து எண் 6- யை இளங்குன்னி வரையிலும், தருமபுரியில் இருந்து கே.அக்ரஹாரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு நகா் பேருந்து எண் 10-யை மஞ்சமேடு வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழித்தடம் நீட்டிக்கப்பட்ட அரசு நகா் பேருந்துகளை அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி, எம்.எல்.ஏ.க்கள் வே.சம்பத்குமாா், ஏ.கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.