தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வரும் நவ. 28-ஆம் தேதி சாமை கொள்முதல் ஏலம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு 3,977 ஹெக்டோ் பரப்பளவில் சாமை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட சாமை தானியங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் மூலம் தருமபுரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் வழியாக இடைத்தரகா் இன்றி சாமையை ஏல முறையில் நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தருமபுரி மதிகோண்பாளையத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வரும் 28-ஆம் தேதி சாமை கொள்முதல் ஏலம் நடைபெற உள்ளது. எனவே, மாவட்ட விவசாயிகள் இந்த கொள்முதல் ஏலத்தில் பங்கேற்று பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.