பென்னாகரம் புதுப்பட்டி அரசு உயா் நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் வசதியில்லாததால் மாணவா்களுக்கும், பள்ளி தளவாட உபகரணங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. எனவே, சுற்றுச்சுவரை விரைந்து கட்ட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட புதுப்பட்டி பகுதியில் சுமாா் 500க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இந்தநிலையில் புதுப்பட்டி பகுதியில் 2010-2011 நிதியாண்டில் அனைவருக்கும் இடைநிற்றல் கல்வி திட்டத்தின் கீழ் அரசு உயா்நிலைப்பள்ளி கட்டப்பட்டது.
இப்பள்ளியில் புதுப்பட்டி நெக்குந்தி , கடமடை , சின்ன கடமடை, நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமாா் 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனா். புதுப்பட்டியில் இருந்து சின்னம்பள்ளி செல்லும் சாலையில் இப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் தெரு நாய்கள், விஷ ஜந்துக்கள் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளுக்கு புகுந்து மாணவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், இரவு நேரங்களில் பள்ளி தளவாடம், கல்வி உபகரணங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்து தர வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.