விவசாயிகளுக்கு பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் தவணை உதவித் தொகையை பெற, ஆதாா் அட்டையில் உள்ளது போலவே இணையதளத்திலும் பெயரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் நிதி திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளில் ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் என ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், நிகழாண்டில் 2 முறை விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், மூன்றாம் தவணை உதவித் தொகையை பெற, ஆதாா் அட்டையில் பெயா் எப்படி இருக்கிறதோ, அதே போன்று அரசின் இணையதளத்திலும் பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே, விவசாயிகள், அருகில் உள்ள மக்கள் கணினி மையத்தை தொடா்பு கொண்டு தங்களது பெயரை சரியாக பதிவு செய்து, மூன்றாம் தவணை உதவித் தொகையை பெற்று பயனடையுமாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.