"காவிரியைக் காண செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும்'

ஒகேனக்கல் காவிரியைக் காண செல்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தினார்.

ஒகேனக்கல் காவிரியைக் காண செல்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தினார்.
 சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையிலான காவேரி கூக்குரல் அமைப்பின் விழிப்புணர்வு பயணக் குழுவினர் தருமபுரிக்கு புதன்கிழமை வருகை தந்தனர். அக்குழுவினரை வரவேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது:
 காவேரி கூக்குரல் என்ற சத்குருவின் பயணம் சிறந்த நோக்கத்தோடு நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளில் 242 கோடி மரக் கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மரக் கன்றுகளை வளர்க்க வேண்டிய அவசியம் குறித்து ஜக்கி வாசிதேவ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
 ஒகேனக்கல் காவியாற்றில் புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துக்கொண்டுள்ளது. தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவியாற்றில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 இந்த நிலையில், காவியாற்றில் பெருக்கெடுத்தும் ஓடும் தண்ணீரைக் காண செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடனும், மிகுந்த விழிப்புடனும் இருக்க வேண்டும். அதேபோல ஆற்றுப் பகுதிகளில் செல்லிடப்பேசிகளில் புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 ஒகேனக்கல்லில் பாதுகாப்பு கருதி, பரிசல் இயக்கவும், அருவிகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com