ஜெருசலேம் பயணத்துக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
 இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கிய இப் புனிதப் பயணம், அக். 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாள்கள் வரை இருக்கும்.
 இதற்கான விண்ணப்பப் படிவம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். விண்ணப்பங்களை அனுப்ப செப். 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 எனவே, புனிதப் பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20' என குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் செயல்படும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com