அரூரில் வனப் பகுதியில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
தருமபுரி மாவட்டம், அரூர்-சிந்தல்பாடி சாலையில் உள்ள கொளகம்பட்டி, குரங்குபள்ளம், தண்டகுப்பம் பகுதியிலுள்ள வனப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான புள்ளிமான்கள் உள்ளன. இந்த வனப் பகுதியானது பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இந்த நிலையில், அரூர் நகரில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அரூர்-சிந்தல்பாடி சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன.
இந்த குப்பைகளை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். அதேபோல், தனியார் மருத்துவமனைகளில் வெளியாகும் மருத்துவக் கழிவுகள், வீடுகளில் அப்புறப்படுத்தப்படும் தேவையற்ற பொருள்கள் வனப் பகுதியில் சாலையோரத்தில் கொட்டுகின்றனர்.
இதனால் வனப் பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், புள்ளிமான்கள் உயிரிழக்கும் நிலையுள்ளது.
எனவே, வனப் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுவதை வனத் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல், அரூர் நகரில் சேகரிப்படும் கழிவுப் பொருள்கள், கழிப்பிட கழிவுநீர் மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.