தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட அரூர் மற்றும் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகங்கள் காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் நல்லம்பள்ளியில் தலா ரூ.2.34 கோடியில் வட்டாட்சியர் அலுவலகங்கள் கட்டப்பட்டன. இந்த அலுவலகங்கள் காணொலிக் காட்சி மூலம் திறக்கப்பட்டன. அரூரில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி குத்துவிளக்கேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த அலுவலக கட்டடங்களில், தரைத்தளத்தில் வட்டாட்சியர் அறை, அலுவலக பிரதான அறை, கணினி அறை, பதிவறை, அலுவலர் கழிவறை, மாற்றுத் திறனாளிகள் கழிவறை மற்றும் பொதுக் கழிவறையும், முதல் தளத்தில் வட்ட வழங்கல் வட்டாட்சியர் அலுவலகம், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகம், கூட்ட அறை, பதிவறை, அலுவலர் கழிவறை, பொது கழிவறை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
அரூரில் நடைபெற்ற நிகழ்வில், அரூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார், கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.தியாகராஜன், வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.