அரூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் பனை விதைகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
அரூர் பெரிய ஏரியின் கரைப் பகுதியில் பனை விதைகள் நடும் பணிகளை எம்பி எஸ்.செந்தில்குமார் தொடக்கிவைத்தார். அப்போது, அவர் கூறுகையில், பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்தரக் கூடியதாகும். நிலத்தடி நீரை பனை மரங்கள் பாதுகாக்கின்றன. பனை மரங்களால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மண் அரிப்புகளை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
இதனால் அரசு சார்பில் பனை மர விதைகள் நடும் பணிகள் நடைபெறுகிறது. எனவே, தன்னார்வ அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் பனை மர விதைகளை அதிக அளவில் நட்டு வளர்க்க வேண்டும். இதேபோல் புங்கன், வேம்பு உள்ளிட்ட மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றார். திமுக ஒன்றியச் செயலர் தேசிங்குராஜன், கட்சி நிர்வாகிகள் மு.கா.முகமது அலி, விண்ணரசன், சந்திரமோகன், சிட்டிபாபு, தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.