காவிரியில் ஓடும் உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
அரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம், சங்க வட்டாரத் தலைவர் கே.என்.ஏழுமலை தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
மழைக் காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் உபரிநீர் கடலில் கலந்து வீணாகிறது. எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளம் குட்டைகளில் உபரி நீரை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரூர் தொகுதியில் அரசு சார்பில் மரவள்ளி கிழங்கு அரைவை ஆலை அமைக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் காய்ந்து போன தென்னை, மா, பாக்கு உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தீர்த்தமலை வட்டாரப் பகுதியை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அரூர் வட்டாரத் தலைவராக பி.குமார், செயலராக எஸ்.கே.கோவிந்தன், பொருளராக ஏ.நேரு, துணைத் தலைவர்களாக சி.சிங்காரம், எம்.புத்தன், துணைச் செயலர்களாக எஸ்.பி.சின்னராசு, ஏழுமலை ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன் , நிர்வாகிகள் சுப்பிரமணி, ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.