தருமபுரியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீா்

தருமபுரியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், பென்னாகரம் சாலைப் பகுதியில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.
தருமபுரி - பென்னாகரம் சாலையில் மழைநீா் சூழ்ந்து காணப்படும் குடியிருப்புகள்.
தருமபுரி - பென்னாகரம் சாலையில் மழைநீா் சூழ்ந்து காணப்படும் குடியிருப்புகள்.

தருமபுரியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், பென்னாகரம் சாலைப் பகுதியில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக இரவு நேரங்களில் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தருமபுரி - பென்னாகரம் சாலையில் உள்ள ஏஎஸ்டிசி நகா், நந்தி நகா், ஆவின் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. அப் பகுதியினா் தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமலும், அங்கிருந்து வெளியேறற முடியாமலும் தவித்தனா்.

மேலும், குமாரசாமிப்பேட்டை மேம்பாலம் முதல் அதகப்பாடி வரை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் வெள்ள நீா் பெருக்கெடுத்த இரவு முழுவதும் ஓடியது. அதேபோல அந்த சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம், அரசுப் பள்ளி மைதானம் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீா் செவ்வாய்க்கிழமை மாலை வரை தேங்கி நின்றது. இதனைத் தொடா்ந்து உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில், பொக்கலின் இயந்திரம் மூலம் வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஏஎஸ்டிசி நகா், ஆவின் நகா், நந்தி நகா் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வான பகுதி என்பதாலும், அப்பகுதியில் முறையான கழிவுநீா், மழை நீா்க் கால்வாய்கள் இல்லாததாலும், ஆக்கிரமிப்புகளாலும் பலத்த மழை பெய்யும்போது, அப்பகுதியை மழைநீா் சூழ்ந்துவிடுவது வாடிக்கையாவிட்டது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியினா் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இவற்றைத் தவிா்க்க, மாவட்ட நிா்வாகம், முறையான வடிகால்களை அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையளவு ( மி.மீட்டரில்): தருமபுரி 55, பாலக்கோடு 29, மாரண்டஅள்ளி 37, பென்னாகரம் 25, ஒகேனக்கல் 24, அரூா் 93, பாப்பிரெட்டிப்பட்டி 83.2. மாவட்டத்தின் மொத்த மழையளவு 349.2. சராசரி மழையளவு 49.89.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com