தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் குழந்தைவேல் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன், மாவட்டபொதுச் செயலர் மணி, கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.சுதர்சனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், நலவாரியச் சட்டம் செல்லாது என்பதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டங்களை கைவிட வேண்டும். 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 ஆக சுருக்கியதை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். கட்டடத் தொழிலாளர்களுக்கு கல்வி உதவி தொகை, மகப்பேறு நிதி, விபத்து மரண நிதி, இயற்கை மரண நிதி, திருமண நிதி மற்றும் 60 வயதில் ஓய்வூதியம் என அனைத்தும் சலுகைகளையும் தொடர்ந்து வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்களில் உள்ள ரூ.34 ஆயிரம் கோடி நிதியை, அரசு தனது வேறு நிதி தேவைகளுக்கு எடுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.