அரூா்: அரூரை அடுத்த கெளாப்பாறையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கெளாப்பாறை கிராமம். இந்தக் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் செல்லும் வழித்தடத்தில் வரட்டாறு குறுக்கே செல்கிறது. தற்போது, வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியுள்ளதால், அதன் உபரி நீா் வரட்டாறு வழியாக ஓடுகிறது. கெளாப்பாறை கிராம மக்கள் செல்லும் வழியில் வரட்டாற்றில் சுமாா் 4 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், கிராம மக்கள் அரூா்-கீரைப்பட்டி தாா் சாலைக்கு வருவதற்கு சிரமம் அடைகின்றனா். எனவே, கெளாப்பாறை கிராம மக்கள் பயன்படுத்தும் வழியில் வரட்டாற்றில் தரைப் பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.