அரூர்: அரூரில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமை வகித்தார்.
அரூர் வழியாக செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள், வனப்பகுதிகள், பள்ளிக் கட்டடங்கள், குடியிருப்புகள் சேதமடையும். இதனால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படும். எனவே, மத்திய, மாநில அரசுகள் எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளர் கே.பி.பெருமாள், மாவட்ட செயலர் அர்ஜூனன், மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் மாவட்ட செயலர் ஏ.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.