அரூர்: மனைவி கொலை வழக்கில் 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வெங்கடேசன் (42) என்பவரை அ.பள்ளிப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன் (42). இவரது மனைவி கஸ்தூரி. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கடந்த 2001-ல் தமது மனைவியின் தலைமீது கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மூன்று மாதம் சிறையில் இருந்தாராம்.
பிறகு, ஜாமீனில் வெளிவந்த அவர் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, அ.பள்ளிப்பட்டி காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேசனை அ.பள்ளிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.