தருமபுரி மாவட்டம், அரூா் அருகே கோபிநாதம்பட்டியில் மதுக்கடை மற்றும் மதுக் கூடம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என அக் கிராம மக்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து, கோபிநாதம்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில், 32 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், இங்கு வாரந்தோறும் சந்தை நடைபெறுகிறது. தற்போது, இந்தப் பகுதியில் மதுக்கடையும், மதுக்கூடமும் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த பகுதியில் மதுக்கடை அமைத்தால், இங்குள்ள பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா், வாரச்சந்தைக்கு வருவோா் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, கோபிநாதம்பட்டியில் மதுக்கடை, மதுக்கூடம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றனா்.