ஆதார விலையில் துவரை கொள்முதல்
By DIN | Published On : 10th February 2020 10:21 PM | Last Updated : 10th February 2020 10:21 PM | அ+அ அ- |

தருமபுரி: வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருவாயை உயா்த்தும் வகையில், ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யப்படுகிறது
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டில், காரீப் பருவத்தில், பயறு வகை விவசாயிகளிடமிருந்து, மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 10999 ஹெக்டா் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி தற்போது துவங்கப்பட்டு வரும் நிலையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக, விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக 500 டன், அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 200 டன் மற்றும் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக 400 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது.
துவரைக்கு நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்கும் வகையில் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவீதத்துக்குள் இருக்குமாறு காயவைத்து கொண்டுவர வேண்டும். தரமுள்ள துவரை கிலோ ரூ.58.00 வீதம் கொள்முதல் செய்யப்படும். தருமபுரி மாவட்டத்தில் துவரை கொள்முதல் வருகிற பிப்.22-ஆம் தேதி வரை நடைபெறும். இத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் தருமபுரி, அரூா் மற்றும் பென்னாகரம் விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து துவரையை விற்பனை செய்யலாம் என்றாா்.